Wednesday, November 7, 2007

8 கை, கால்களுடன் பிறந்த குழந்தைக்கு வாழ்வு தந்த டாக்டர்கள்!


பீகாரில் அராரியா எனும் இடத்தைச் சேர்ந்த இரண்டு வயது லட்சுமி, முழுமை அடையாத மற்றொரு உடலுடன் ஒட்டிப் பிறந்த ஒரு பெண் குழந்தை ஆவார். அவ்வாறு பயனின்றி ஒட்டியுள்ள உடம்பின் மிகை உறுப்புகளை நீக்குவதற்கு, 40 மணி நேர அறுவை சிகிச்சையை, பெங்களூரின் புறப்பகுதியில் உள்ள நாராயண சுகாதார மாநகரில் உள்ள ஸ்பார்ஷ் மருத்துவமனையில் குழு சிகிச்சை தொடங்கினர்.

இது ஒரு மிகச் சிக்கலான, அதி நுட்பத் திறன் தேவைப்படும் அறுவை எனக்கூறப்படுகிறது. இரண்டு உடல்கள் ஒட்டியிருந்தாலும், ஒன்றுக்குத்தான் தலை இருக்கிறது. ஆனால், நான்கு கைகள், நான்கு கால்கள் இருக்கின்றன. இந்தக் குழந்தை இந்த எட்டு உறுப்புகளையும் இயக்குகிறது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஷரன்படீல் தலைமையில், குழந்தை மருத்துவர்கள், நரம்பியல், பிளாஸ்டிக், நுண்ணிய நாளங்கள் ஆகியவற்றில் அறுவை சிகிச்சை செய்யும் வல்லுநர் குழு சிகிச்சையில் ஈடுபட்டிருக்கிறது.

நேபாள எல்லைக்கு அருகில் உள்ள, பிகாரைச் சேர்ந்த ஒரு கிராமத்தின் ஏழைக் குடும்பக் குழந்தைக்கு இந்தச் சிக்கலான மருத்துவத்தைச் செய்ய அதை ஒர் அறை கூவலாக ஏற்று, மருத்துவமனை முன் வந்துள்ளது. இத்தகைய சிகிச்சை இந்தியத் துணைக் கண்டத்தில் இதுவே முதல் முறையாகும். இதற்கு ரூ.25 லட்சம் ரூபாய் செலவாகும். இதை இலவசமாக மருத்துவமனை செய்துள்ளது.

கால்களும், தண்டுவடமும் இணையும் எலும்பில் இரு உடம்புகள் ஒட்டியுள்ளன. 50 ஆயிரம் பிறப்புகளில் ஒன்றுக்கு இக்குறை ஏற்படலாம். கல்லீரல், குடல், சிறுநீர்ப் பாதை, பிறப்பு உறுப்புகள், நாளங்கள், எலும்பு தசை ஒட்டிய பகுதிகள் ஆகிய உடற் கூறுகள் தொடர்பாக இந்தச் கிகிச்சை செய்யப்படுகிறது.

ஒரு மாதத்திற்கு முன்பு மருத்துவமனைக்கு வந்த குழந்தை லட்சுமி, சரியான உணவின்றி, நலிந்தும், ரத்த சோகையுடனும் இருந்ததால், அக்குறைகளைப் போக்கி, சிகிச்சை வெற்றி என அறிவிக்கப்பட்டுள்ளது

தற்போது லட்சுமி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அங்கு சில நாட்கள் டாக்டர்கள் அவரது உடல் நிலையைக் கண்காணிப்பார்கள்.

இனி லட்சுமி வழக்கமான பெண் குழந்தையைப் போல அனைத்து நலமுடனும் வாழ வழி பிறந்துள்ளது என்றார்.

தங்களது மகளுக்குப் புது வாழ்வு கொடுத்துள்ள டாக்டர்களுக்கு லட்சுமியின் பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி கூறினர். தங்களது மகளுக்குப் புது வாழ்க்கை கொடுத்த டாக்டர்களுக்கும், கடவுளுக்கும் நன்றி சொல்வதாக லட்சுமியின் தந்தை சாம்பு கூறினார்.

லட்சுமி விரைவில் முழு குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.

No comments: